லவகுசா

 லவகுசா


பகுதி-8 

••••••••••••••••••••••••••••••••

குழந்தைகள் பிறந்தால் அவற்றை பூதங்களும், பிசாசுகளும் அணுகும் என்ற நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது. 


இப்போதும் கூட இருக்கிறது. 


இதற்காகத்தான், குழந்தையின் இடுப்பில் மந்திரித்த கயிறு கட்டுவது வழக்கமாக இருக்கிறது. 


வால்மீகி இருக்கும் ஆஸ்ரமத்தில் பூத பிசாசுகளுக்கு வேலையே கிடையாது. 


ஆனாலும், குழந்தைகள் மீது கொண்ட அன்பின் காரணத்தால், வால்மீகி முனிவர் மந்திரங்களை ஓதினார். 


ஒரு குழந்தையின் உடலை குசத்தால் துடைத்து சுத்தம் செய்தார். 


குசம் என்றால் தர்ப்பைப் புல். மற்றொரு குழந்தையை லவத்தால் துடைத்தார். 


லவம் என்றால் பசுவின் வால் முடி. 


இப்படி லவம், குசத்தால் துடைக்கப்பட்டதால் இந்தக் குழந்தைகள் லவன், குசன் என்று பெயர் பெற்றனர். 


இவர்களை லவகுசர் என்று அழைப்பது வழக்கமாயிற்று.


இவ்வாறு துடைத்ததன் மூலம், கண்ணுக்கு தெரியாத தீயசக்திகள் குழந்தையை அணுகாது என நம்பினார் வால்மீகி. 


அது மட்டுமல்ல, ராமன் மீது கொண்டிருந்த பாசமும் ஒரு பக்கம் அவரை இவ்வாறு செய்யச்செய்தது. 


அரண்மனையிலே இந்தக் குழந்தைகள் பிறந்திருந்தால், என்னென்னவோ திருஷ்டி கழிப்புகள் எல்லாம் நடந்திருக்கும். 


அதையெல்லாம் இங்கேயே செய்ய வால்மீகியாலும் முடியும். 


இருப்பினும், முனிவராகிய அவர் சாஸ்திரத்துக்கு உட்பட்ட மந்திரங்களைச் சொல்லியே குழந்தைகளைப் பாதுகாத்தார். 


லவகுசர் பிறப்பதற்கு சிலநாட்கள் முன்னதாக, அயோத்தியில் ராமபிரானை சில முனிவர்கள் சந்தித்தனர். 


அவர்கள், ஸ்ரீராமா! லவணன் என்ற அரக்கனின் தந்தை மது, தான் செய்த தவத்தால், சிவபெருமானின் சூலத்தைப் பெற்றான். 


அதை தன் மகனின் பாதுகாப்புக்காக கொடுத்தான். 


தனக்கு ஆபத்து வந்தால் மட்டுமே, அதைப் பயன்படுத்த வேண்டிய அவன், தேவையில்லாமல் சூலமெய்து எங்களை வதைக்கிறான். 


எங்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க உன்னை விட்டால் யாருமில்லை. 


அயோத்தியை விட்டால் வேறு புகலிடம் ஏது? என்றனர். 


ராமபிரான் கொதித்தெழுந்தார். 


முனிவர்களே! கவலை கொள்ளாதீர்கள். 


உங்களுக்கு இனி அச்சம் தேவையில்லை. 


நீங்கள் தொடர்ந்து யாகத்தையும், தவத்தையும் நடத்துங்கள். 


லவணனை நான் விரைவில் எமலோகம் அனுப்புவேன், என்ற ராமன், தம்பிகளுடன் இதுபற்றி ஆலோசனை செய்தார். 


லட்சுமணன் நான் போகிறேன், காட்டுக்கு என்றான். 


உடனே பரதன், வேண்டாம் அண்ணா! இவன் உன்னோடு பதினான்கு ஆண்டுகள், கண் இமைக்காமல் பட்ட துன்பம் போதாதா? 


அதிகாயனையும், இந்திரஜித்தையும் கொல்வதற்காக எடுத்த சிரத்தை போதாதா? 


நான் போகிறேன், என்றான். 


அப்போது சத்துருக்கனன், இருவரும் வேண்டாம். 


நீங்கள் காட்டில் இருந்து திரும்பும் வரை நாட்டைக் காக்கும் அறப்பணியில், உங்களை நினைத்து கண்ணீர் வடித்தபடியே இருந்த பரதன் அண்ணா ஏற்கனவே களைத்துப் போயிருக்கிறார். 


அவர் வேண்டாம், நான் போகிறேன், என்றான். 


தம்பியரின் ஒற்றுமை கண்டு ராமன் மகிழ்ந்தார். 


சத்ருக்கனா! நீ சொல்வதே சரி. 


மேலும், போர்க்களத்தில் உன்னை வெல்ல வல்லவன் யாருமில்லை. 


நீ லவணனைக் கொன்று முனிவர்களைக் காப்பாயாக, என்றார். 


சத்ருக்கனன் காட்டிற்கு படைகளுடன் புறப்பட்டான். 


அவன் சென்ற தேர், வால்மீகி முனிவர் தங்கியிருந்த ஆஸ்ரமத்தின் அருகில் நின்றது. 


வால்மீகி முனிவரை பார்த்து, அவரிடம் ஆசி பெற்றான். 


அவர் மூலமாக சீதாப்பிராட்டி, அவரது ஆஸ்ரமத்தில் தங்கியிருக்கும் விபரத்தையும், அண்ணியாருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதையும் அறிந்து மகிழ்ச்சியடைந்தான். 


அதேநேரம் இந்த குழந்தைகள் அயோத்தியில் பிறந்திருந்தால் எந்தளவுக்கு நாட்டு மக்கள் மகிழ்ந்திருப்பார்கள் என்பதையும் எண்ணி வேதனைப்பட்டான். 


பின்னர் அவன் தன் கடமையை நிறைவேற்றுவதற்காக மதுபுரி என்ற நகரை அடைந்தான். 


அந்த நகரைத்தான் லவணன் ஆண்டு கொண்டிருந்தான். 


அவனுடன் பயங்கரமாக போர் செய்து கொன்றான். 


மதுபுரியை 12 ஆண்டுகள் ஆட்சி செய்தான். 


பிறகு தனது படையை அங்கு நிறுத்திவிட்டு, அயோத்திக்கு புறப்பட்டான். 


ஒரு ஊரில் 12 வருடங்கள் தங்கிவிட்டால் அது அவரது சொந்த ஊராக மாறிவிடும் என்ற ஐதீகத்தை அக்காலத்தில் அரசர்களும், மக்களும் பின்பற்றினர். 


அந்த அடிப்படையில் மதுபுரியில் 12 ஆண்டுகள் தங்கியிருந்து, ஆட்சி செய்ததன்மூலம் மதுபுரி சத்ருக்கனனுக்கு சொந்தமாயிற்று. 


அயோத்தி சென்ற அவன் அண்ணனிடம் ஆசி பெற்றான். 


இதன்பிறகு ராமபிரான், ராஜசூயம் என்ற பெரிய யாகத்தை நடத்த முடிவு செய்தார். 


தன் தம்பிகளை அழைத்து வரும்படி தாமரைக்கண்ணனான அவன், வாயில் காவலனை அனுப்பி வைத்தான். 


அண்ணனின் உத்தரவு கேட்ட அரைக்கணத்தில் தம்பிகள் மூவரும் ராமனின் முன்னால் நின்றனர். 


அந்த தம்பிகளை அன்புடன் பார்த்த ராமபிரான், என் உயிர் போன்ற செல்வங்களே! உங்களைக்கொண்டு ராஜசூய யாகம் நடத்த முடிவெடுத்துள்ளேன், என்றார். 


ராஜசூயம் என்றால் பலநாட்டு அரசர்களையும் வென்று அவர்களுடைய தேசத்தை தன் வசத்தில் கொண்டுவர நடத்தப்படும் யாகமாகும். 


அடங்காத அரசர்களை அடக்குவதற்கு போர் தொடுக்க வேண்டியிருக்கும். 


அண்ணன் இப்படி யாகம் நடத்துவதில், சிறு மாற்றம் செய்ய தம்பி லட்சுமணன் விரும்பினான்.


அவன் ராமபிரானிடம், அண்ணா! நான் சொல்வதை தயவு செய்து செவி மடுத்துக் கேளுங்கள். 


எனது பேச்சு குழந்தையின் பேச்சைப்போல இருக்கலாம். 


ஆனாலும், ஒரு குழந்தையின் மழலைப்பேச்சு தாய்க்கு எப்படி பிடிக்குமோ, அதுபோல என் சொற்களையும் கேளுங்கள். 


பல நூல்களைப் படித்திருந்தாலும் அறிவேதும் இல்லாத இந்த சிறியவனின் சாதாரண சொற்களை தயவுடன் கேளுங்கள். 


இந்த உலகம் உங்களை மட்டுமே நம்பியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தாங்களே அரசர்க்கெல்லாம் அரசர். 


அப்படிப்பட்ட தாங்கள் அரசர்களுடன் சென்று போர் புரிந்து செல்வத்தை வாரிக்கொணர்வதைவிட, அஸ்வமேத யாகம் செய்தால் எளிமையும், உயிர்ச்சேதமும் குறையும். 


அதுபற்றி நான் தங்களுக்கு விளக்கமாக சொல்கிறேன், என்றான். 


தொடரும்

Comments

Popular posts from this blog

12TH STANDARD CHEMISTRY PROJECT- DYEING

12TH STANDARD CHEMISTRY PROJECT (CBSE) - DENATURATION OF MILK AND EGG PROTEIN

ஸ்ரீசனீஸ்வர பகவான் நோய்களை யாருக்கு எப்போது தருவார் ?