சிவனின் திருவிளையாடல்

 சிவனின் திருவிளையாடல்


திருவிளையாடல் 31


உலவாக்கிழி அருளிய படலம்


மன்னன் குலபூஷண பாண்டியன் பெரிய வள்ளல். சிவ புண்ணியங்களை தவறாது செய்து வந்ததால் பேரும் புகழும் பெற்றான். இதனால் அவனுக்கு அகந்தை ஏற்பட்டது. அகந்தை கொண்ட மன்னன் குலபூஷணனுக்கு மருந்து தர முடிவு செய்தார் சுந்தரேஸ்வரர். மன்னன் தவறு செய்தால் மக்களுக்கு பாவம். மக்கள் தவறு செய்தால் மன்னனுக்கு பாவம் ஏற்படும் என்பது நியதி. இப்போது, மன்னன் செய்த பாவத்தால் மதுரை மக்களுக்கு சோதனை ஏற்பட்டது. மழை இல்லாமல் பயிர்கள் வாடின. வேதம் கற்ற அந்தணர்கள் யாகங்களைச் சிறப்பாகச் செய்து, வருணனுக்கு அவிர்பாகம் போய் சேர்ந்தால் தான், அவன் மகிழ்ச்சியுடன் மழையைக் கொடுப்பான். அவ்வாறு மறுத்தால் ஒன்று பெருமழை கொட்டி பயிர்களை அழித்து விடுவான், ஆறுகளையும் குளங்களையும் கரை மீறி போகச் செய்து சேதப்படுத்தி விடுவான். அல்லது பெய்யாமலேயே கெடுத்து விடுவான். இப்போது, மதுரையில் மழை இல்லாமல் போய்விட்டது. வைகையில் சொட்டுத்தண்ணீர் இல்லை. குளங்களும் வற்றியதால் குடிநீருக்கே தட்டுப்பாடாகி விட்டது. இது நீண்டகாலம் நீடித்ததால், பசி, பட்டினி என மக்கள் வருந்தினர். மன்னனுக்கு தனக்குள் ஏற்பட்ட அகந்தை புரியவில்லை. ஆனால், நான் என்னவெல்லாம் பூஜை செய்கிறேன். மக்களை நன்றாகத்தானே கவனிக்கிறேன், கஷ்டப்பட்டவர்களுக்கு வரி விலக்கெல்லாம் கொடுக்கிறேனே! சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆறுகால பூஜைக்கு குறையாமல் செய்கிறேனே! என்ன பிரயோஜனம், என் நாட்டில் மழை இல்லாமல் செய்துவிட்டாரே, இந்த பரமசிவன்! சோமசுந்தரக் கடவுளே! சுந்தரேஸ்வரா! தென்னாடுடைய சிவனே! இந்த சோதனையை ஏன் தந்தாய்? என்று அரற்றினான். கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கினான். அங்கே எந்த பதிலும் கிடைக்கவில்லை. அரண்மனைக்கு வந்து பஞ்சணையில் படுத்தான். என்ன தான் பட்டுமெத்தையில் படுத்து, சேடியர் சாமரம் வீசினாலும் கவலைப்படும் மனமுள்ளவன் தூங்கியதாக சரித்திரமில்லை. கண்கள் மூடியிருந்தாலும் இவனுக்கும் தூக்கம் வராமல் புரண்டான். அப்போது யாரோ ஒருவர் வந்து அவனது கையில் ஏதோ ஒன்றைக் கொடுத்தது போல் இருந்தது. இதன் பெயர் உலவாக்கிழி. இதிலுள்ள பொருளை மக்களுக்கு கொடு. இதில் இருந்து அள்ள அள்ளக் குறையாது, என்று அவன் காதுகளில் ஒலி கேட்டது. திடுக்கிட்டு எழுந்த அவனது கையில் ஒரு பொற்கிழி இருந்தது. அதனுள் தங்க நாணயங்கள் ஏராளமாக இருந்தன. சுந்தரேஸ்வரரே நேரில் வந்து தந்ததாக கருதிய அவன், சுந்தரேஸ்வரா! எங்கள் வறுமையை இந்த பொற்கிழியிலுள்ள தங்கக் காசுகளைக் கொண்டு சரி செய்து விடுவோம். ஆனால், பஞ்சம் ஏற்பட்டதற்கான காரணம் தெரியாவிட்டால், நான் என்ன தவறு செய்தேன் என்பது தெரியாமலே போய்விடுமே, என்று சொல்லிவிட்டு படுத்தான். சற்றே கண்ணயர்ந்த வேளையில் கனவு உருவானது. குலபூஷணா! நீ எனக்குரிய பூஜைகளை ஒழுங்காகவே செய்கிறாய். ஆனால், என் மீது கொண்ட பக்தியைக் கொச்சைப்படுத்தி விட்டாய்! நீ மட்டும் தான் உலகில் உயர்ந்த பக்தன் என நினைத்தாயே! அது அகந்தை அல்லவா! பக்தனுக்கு ஆணவம் வரலாமா! ஆணவத்தின் காரணமாக அறிவிழந்து வேத விற்பன்னர்களை அவமதித்தாய். அதன் பலனையே அனுபவிக்கிறாய். உன் ஒருவனின் தவறால், உன் மக்களும் கஷ்டப்பட்டனர், என்று ஒரு குரல் கேட்டது. மன்னன் திடுக்கிட்டு விழித்தான். சோமசுந்தரப் பெருமானே! தாங்களா இவ்வாறு அறிவித்தது! ஆணவத்தால் அறிவிழந்த என்னைத் திருத்தவா இந்த நாடகம்! என்னால், என் மக்கள் சிரமப்பட்டதற்காக வருந்துகிறேன். தாங்கள் தான் என்னை மன்னிக்க வேண்டும், என்றான். மறுநாள், உலாவாக்கிழியை பொன் பட்டு ஒன்றின் மீது வைத்து பூஜை செய்து, மக்களை வரிசையாக வரச்செய்து, அனைவரும் பொன் வழங்கினான். உடனடியாக யாக பூஜைக்கும் ஏற்பாடு செய்தான். வேதம் கற்ற அந்தணர்களை வரவழைத்து தாராளமாகப் பொன்னும், பொருளும், பசுக்களையும் அழித்து, அவர்களை உதாசீனம் செய்ததற்காக மன்னிப்பும் கேட்டான். பாண்டியநாட்டில் மீண்டும் எங்கும் யாக ஒலி கேட்டது. மகிழ்ச்சியடைந்த தேவர்கள் மழையைத் தந்தனர். பயிர்கள் செழித்தன. பசி பட்டினி நீங்கியது.


திருச்சிற்றம்பலம்

Comments

Popular posts from this blog

12TH STANDARD CHEMISTRY PROJECT- DYEING

12TH STANDARD CHEMISTRY PROJECT (CBSE) - DENATURATION OF MILK AND EGG PROTEIN

ஸ்ரீசனீஸ்வர பகவான் நோய்களை யாருக்கு எப்போது தருவார் ?