லிங்கபுராணம்
லிங்கபுராணம்
பகுதி 8
தாருகாவனத்தில் திகம்பர சந்நியாசி தாருகாவனத்தில் இருந்து முனிவர்களுக்கு உண்மையை உணர்த்த எண்ணி சிவபெருமான் புறப்பட்டார். திகம்பரராய், சிறந்த அழகனாய், கையில் ஓடு ஏந்தி பிக்ஷõடனாராய் புறப்பட்டார் ஈசன். அவரைக் கண்ட ரிஷிபத்தினிகள் தம் சுய அறிவின்றி, ஈசன் வசத்தினராகி அவரைப் பின் தொடர அனைவருடனும் முனிவர்கள் இருந்த யாகசாலைக்கு அருகில் வந்தார் ஈசன். இந்நிலையில் முனிவர்கள் சினம் கொண்டு யாரோ ஒரு காமுகனை தன் பத்தினிகள் பின் தொடர்ந்து வந்திருப்பதைக் கண்டு நிலைகுலைந்தனர். அவர்கள் அந்த திகம்பர சன்னியாசியைச் சபித்தனர். ஆனால், அவர்களுடைய சாபம் பலனற்றுப் போகவே திகைப்படைந்தனரே அல்லாமல், வந்தவர் பரமன் என்பதை அறிந்து கொள்ளவில்லை. அப்போது சன்னியாசி திடீரென்று மறைந்துவிட்டார். சன்னியாசி மறைந்தவுடன் கொடுந்துன்பங்கள் முனிவர்களைப் பற்றிக் கொண்டன. செய்வதறியாது அவர்கள் உதவிக்காக பிரமனை நாடினர். நிகழ்ந்தது அனைத்தையும் அறிந்த பிரமன் முனிவர்களிடம் கீழ்க்கண்டவாறு கூறினார். நீங்கள் பெரும் தவறு இழைத்துவிட்டீர்கள். முக்கியமாக அனைத்துக்கும் மேலான பரம்பொருள் ஒன்று இருப்பதை ஏற்கவில்லை. அதனை உணர்த்துவதற்கே எம்பெருமான் உங்களிடையே வந்தார். அவரை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை. சாபமும் கொடுத்தீர்கள். அந்த அபசாரமே வெப்ப நோயால் உங்களைத் துன்புறுத்துகிறது என்றார். ஈசனிடம் பக்தி உள்ளவன், அதிதியாக வரின், அவனை ஈசனாகவே எண்ணி உபசரிக்க வேண்டும் என்ற மறைகள் கூற்றை நீங்கள் அறியவில்லை. அதிதியை உபசரித்து அழியாப் பேரின்பம் பெற்ற சுதரிசனன் வரலாற்றைக் கேளுங்கள் என்று அந்த வரலாற்றைக் கூறினார் பிரமன்
தொடரும்
Comments
Post a Comment